கொள்ளை 
செய்திகள்

மாநகராட்சி பெண் ஊழியர் வீட்டில் பணம், நகை திருட்டு

மாநகராட்சி பெண் ஊழியர் வீட்டில் பணம், நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

பெரம்பூர்:

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 5-வது தெருவில் வசித்து வருபவர் காளியம்மாள் (வயது 50). இவர், சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர், வீட்டை பூட்டிவிட்டு காஞ்சீபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகை, ரூ.20 ஆயிரத்தை திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி வியாசர்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் வியாசர்பாடியை சேர்ந்த பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரி டேனியல் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை, 150 கிராம் வெள்ளி கொலுசு, ரூ.2 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இதுபற்றி எம்.கே.பி. நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மணலி அருகேயுள்ள சேலைவாயல் பகுதியை சேர்ந்த மிளகாய் வியாபாரி ரமேஷ் வீட்டின் பூட்டை உடைத்து 3½ பவுன் தங்க நகை மற்றும் விலையுயர்ந்த டி.வி. ஆகியவற்றை திருடிச்சென்றுவிட்டனர். இதுபற்றி மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.