வில்லியனூர்:
வில்லியனூர் அருகே சேந்தநத்தம், ஆரியப்பாளையம் பகுதியில் சங்கராபரணி ஆற்றில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்து பதுக்கி
வைத்து, மினிவேன் மூலம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார்
சேந்தநத்தம் சங்கராபரணி ஆற்றுப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை வழிமறித்து சோதனை செய்ததில் மணல் கடத்தியது
தெரியவந்தது. இதையடுத்து வேனில் இருந்த ஆரியப்பாளையம் நந்தகோபால், சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மினிவேன் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் சேந்தநத்தத்தை சேர்ந்த அருள், சிவா ஆகியோர் மணலை கடத்தி, பதுக்கி வைத்து தங்களிடம் விற்றதும், அவர்களிடம் இருந்து மணல் வாங்கிச்செல்லும் செல்லும்போது போலீசில் சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அருள், சிவா ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.