வலங்கைமான் அருகே தொழுவூர் குடியான தெருவில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்ற காட்சி. 
செய்திகள்

தொழுவூரில் பழுதடைந்த சாலையில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்- கிராம மக்கள் அவதி

வலங்கைமான் அருகே தொழுவூரில் பழுதடைந்த சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கிராம மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

மாலை மலர்

வலங்கைமான்:

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தொழுவூர் ஊராட்சியில் தொழுவூர் குடியானத்தெரு பகுதியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக அந்த பகுதியில் உள்ள பழுதடைந்த சாலையில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர்.

மேலும் வாகனங்களில் செல்வோருக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மழைநீர் தேங்கி நிற்பதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

தொடர்ந்து பருவமழை பெய்தால் கூடுதலாக தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்தி, பழுதான சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.