நெல்லை:
நெல்லை சந்திப்பை அடுத்த உடையார்பட்டி பகுதி மாநகரின் மையப்பகுதி ஆகும். இங்கு கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சந்திப்பு போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாரிடம் புகார் தெரிவித்தவர்களை மிரட்டுவதற்காக நேற்று முன்தினம் ஒரு கும்பலை சேர்ந்த 4 பேர் உடையார்பட்டி பகுதிக்கு வந்தனர். அதில் 2 பேர் கையில் அரிவாளை வைத்து இருந்தனர். அவர்கள் உடையார் பட்டி- மேகலிங்கபுரம் சாலையில் நின்று அரிவாளை சுழற்றி அங்கிருந்த பொதுமக்களை மிரட்டியதாகவும், அந்த வழியாக சென்ற நாய் ஒன்றை அரிவாளால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்களையும் அரிவாளால் வெட்டுவது போல விரட்டி சென்றனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதனை கண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்களிடம் போலீசார் கும்பல் குறித்து விசாரித்தனர். ஆனால் யாருக்கும் அவர்கள் யார் என்று தெரியவில்லை.
இதனால் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை சேகரித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே கும்பல் அரிவாளுடன் ரகளை செய்த வீடியோ சமூக வலை தளங்களிலும் வைரலானது.
போலீஸ் விசாரணையில் தாழையூத்தை சேர்ந்த மதன்(வயது24) மற்றும் அவனது கூட்டாளிகளான வெள்ளப்பாண்டி(34), சங்கரபாண்டி(35), பாஸ்கர்(23) ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதில் ஒருவரான வெள்ளப் பாண்டியை போலீசார் கைது செய்து நாங்குநேரி சிறையில் அடைத்தனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.