கோப்புபடம் 
செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் டாக்டர்கள் வேலைநிறுத்தம் - தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் பூட்டிக்கிடந்தன

ஒருங்கிணைந்த மருத்துவ முறையை உருவாக்க எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்டத்தில் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

விழுப்புரம்:

ஒருங்கிணைந்த மருத்துவ முறையை உருவாக்கும் மத்திய அரசின் கொள்கையை எதிர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் பூட்டிக்கிடந்தன.

நவீன ஆங்கில மருத்துவ முறையும், இந்திய மருத்துவ முறைகளையும் இணைத்து ஒருங்கிணைந்த மருத்துவ முறையை உருவாக்கும் மத்திய அரசின் கொள்கையை எதிர்த்து இந்திய மருத்துவ சங்கம், அனைத்து மருத்துவ சங்க கூட்டமைப்பு ஆகியவை சார்பில் நேற்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்த போராட்டத்தை டாக்டர்கள் தொடங்கினர். விழுப்புரம் மாவட்டத்திலும் இந்திய மருத்துவ சங்கம், அனைத்து மருத்துவ சங்க கூட்டமைப்பை சேர்ந்த டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு சில அரசு டாக்டர்கள் சங்கத்தினரும் வேலை நிறுத்தம் செய்தனர்.

மாவட்டம் முழுவதும் சுமார் 2,500 டாக்டர்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள 50 தனியார் மருத்துவமனைகள், 300 கிளினிக்குகள் பூட்டிக்கிடந்தன. இந்த மருத்துவமனைகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோயாளிகள் பிரிவு செயல்படவில்லை. அவசர சிகிச்சை, அவசர அறுவை சிகிச்சை மற்றும் கொரோனா சிகிச்சை பணியில் மட்டும் வழக்கம்போல் டாக்டர்கள் ஈடுபட்டனர். டாக்டர்களின் இந்த வேலை நிறுத்தம் காரணமாக தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. அதே நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது.