திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் எம்.ஜி.ஆர். நகர் அய்யப்பன் தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன். கூலித்தொழிலாளி. இவரது மகன் சஞ்சய் குமார் (வயது 14) இவர் மணவாளநகர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் சஞ்சய்குமார் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான பரத் (15), சஞ்சீவி (15) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் திருவள்ளூரில் இருந்து அதிகத்தூரில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பரத் ஓட்டிச்சென்றார். அவருக்கு பின்னால் சஞ்சீவி மற்றும் சஞ்சய்குமார் அமர்ந்து இருந்தனர்.
அந்த மோட்டார் சைக்கிள் திருவள்ளூரை அடுத்த அதிகத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த மினி வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக டிரைவர் வேனை அங்கேயே விட்டு விட்டு தப்பிச்சென்று விட்டார். இதை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே சஞ்சய்குமார் பரிதாபமாக இறந்து போனார். பலத்த காயம் அடைந்த பரத் மற்றும் சஞ்சீவி ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஜானகிராமன் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.