கைது 
செய்திகள்

வளசரவாக்கத்தில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை கடையில் மாற்றிய வாலிபர் கைது

யூ-டியூப் பார்த்து ஜெராக்ஸ் எந்திரம் மூலம் 2 ஆயிரம் கள்ளநோட்டுகளை அச்சடித்த வாலிபர், கடையில் மாற்றி பொருட்கள் வாங்கியபோது பிடிபட்டார்.

மாலை மலர்

பூந்தமல்லி:

வளசரவாக்கத்தில் உள்ள சில கடைகளுக்கு நேற்று வந்த வாலிபர் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து பொருட்கள் வாங்கிவிட்டு மீதி சில்லறை வாங்கி சென்றார். அதன் பிறகு கடை உரிமையாளர்கள் கவனித்தபோது, அந்த நோட்டு கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. இந்தநிலையில் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து கடைகளில் இருந்து வளசரவாக்கம் போலீசாருக்கு கள்ளநோட்டுகள் வந்ததாக புகார்கள் வந்தது.

இதனால் வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடை உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அவர்கள் அளித்த தகவலின் பேரில், அந்த நபரை தேடினார்.

அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மடக்கி சோதனை செய்தபோது அவரிடம் கள்ளநோட்டுகள் இருந்தது தெரியவந்தது.

அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த இலியாஸ் (வயது 35), என்பதும் இவருக்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தால் யூ-டியூப் பார்த்து பிரத்தியேகமாக ஜெராக்ஸ் எந்திரம் ஒன்றை வாங்கி அதன் மூலம் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து கடைகளில் கொடுத்து மாற்றி வந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, இலியாசிடமிருந்து 2 கள்ள நோட்டுகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.