வலங்கைமான்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த கீழே விடையள் ஊராட்சி கருப்பூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் துரை. இவருடைய மனைவி சுந்தராம்பாள் (வயது 60). இவரது கணவர் துரை உயிரிழந்து விட்டதால் அந்த பகுதியில் இட்லி கடை நடத்தி வந்தார்.இந்த நிலையில் சுந்தராம்பாள் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வலங்கைமான் பகுதியில் இருந்து குடவாசலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் சுந்தராம்பாள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சுந்தராம்பாள் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.