கருப்பு பூஞ்சை 
செய்திகள்

கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்தது உத்தரகாண்ட்

உத்தரகாண்ட் மாநிலத்தில் 65 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மாலை மலர்

டேராடூன்:

நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் கோரப்பிடி இன்னும் விலகாத நிலையில், கருப்பு பூஞ்சை நோயும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

இதையடுத்து அனைத்து மாநிலங்களும் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம், குஜராத், ஒடிசா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கருப்பு பூஞ்சை நோயை தொற்றுநோயாக பிரகடனம் செய்துள்ளன.

அவ்வகையில், தற்போது உத்தரகாண்ட் மாநில அரசும் கருப்பு பூஞ்சை நோயை தொற்றுநோயாக அறிவித்துள்ளது. மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகரித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதாரத்துறை செயலாளர் கூறி உள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 65 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 61 பேர் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை கூறி உள்ளது.