டேராடூன்:
உத்தரகாண்ட் மாநில முதல்மந்திரியாக செயல்பட்டு வருபவர் திரிவேந்திர சிங் ராவத். இவருக்கு கடந்த 18-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை எடுத்துவந்தார்.
இந்நிலையில், முதல்மந்திரி ராவத் நேற்று மாலை திடீரென டேராடூனில் உள்ள டூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் குணமடையாததால் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திரிவேந்திர சிங் ராவத்தின் உடல்நிலை நன்றாக உள்ளது எனவும் பயப்பட தேவையில்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரை மருத்துவர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.