புதுடெல்லி:
நாடு முழுவதும் பரவலாக கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு பரவத் தொடங்கி உள்ள நிலையில், அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
அனைத்து மாநில அரசுகளும் கருப்பு பூஞ்சை பாதிப்பை தொற்று நோயாக அறிவிக்க வேண்டும். தொற்று நோய்கள் சட்டம் 1897 இன் கீழ் கருப்பு பூஞ்சை பாதிப்பையும் தொற்றுநோய் என பட்டியலிடவேண்டும்.
கருப்பு பூஞ்சை நோயை கண்டறிதல் மற்றும் அதற்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஐசிஎம்ஆர் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்கள் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம், கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனா நோயாளிகளிடையே காணப்படும் கருப்பு பூஞ்சை அறிகுறிகள் என அனைத்து தகவல்களும் சுகாதார அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநில அரசுகள், கருப்பு பூஞ்சை பாதிப்பை ஏற்கனவே தொற்று நோயாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.