கொரோனா பரிசோதனை 
செய்திகள்

மருத்துவமனைகளில் அனுமதிக்க கொரோனா பாசிட்டிவ் சான்றிதழ் தேவையில்லை -மத்திய அரசு

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன், மருந்துகள் உள்ளிட்டவை எக்காரணம் கொண்டும் மறுக்கப்படக்கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

நாட்டில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கடுமையாக உள்ள நிலையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நோயாளிகளை மருத்துவமனைகளில் சேர்ப்பது தொடர்பான, திருத்தப்பட்ட தேசிய கொள்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன், மருந்துகள் உள்ளிட்டவை எக்காரணம் கொண்டும் மறுக்கப்படக்கூடாது. மருத்துவமனைகளில் அனுமதிக்க, நோயாளிகளுக்கு கொரோனா பாசிட்டிவ் சான்றிதழ் தேவையில்லை. கொரோனா அறிகுறி இருந்தாலே மருத்துவமனையில் அனுமதிக்கலாம்.

சரியான அடையாள அட்டை இல்லை என்ற காரணத்திற்காக எந்த நோயாளிக்கும் மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்படக்கூடாது. மருத்துவமனையில் அனுமதிப்பது தேவையின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.