ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாது அடைமழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பலத்த மழையாகவும் பகல் நேரங்களில் விட்டுவிட்டு சாரல் மழையும், அடைமழையும் பெய்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி நகரசபையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்தநிலையில் குமரிக்கடல் பகுதியில் வளிமண்டலத்தில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதற்கேற்ப ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று 3-வது நாளாக பகல் முழுவதும் விட்டுவிட்டு நல்ல மழை பெய்தது.
இதன்காரணமாக மக்கள் தங்களின் அத்தியாவசிய பணிகளுக்கு வெளியில் செல்ல முடியாமல் அவதி அடைந்து வந்தனர். மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:- ராமநாதபுரம்-31.5, மண்டபம்-25, பள்ளமோர்குளம்-11, ராமேசுவரம்-27.2, தங்கச்சிமடம்-36.3, பாம்பன்-32.8, ஆர்.எஸ்.மங்கலம்;-12, திருவாடானை-22.4, தொண்டி-14.6, வட்டாணம்-30.6, தீர்த்தாண்டதானம்-28.3, பரமக்குடி-8.8, முதுகுளத் தூர்-7, கடலாடி-4, வாலிநோக்கம்-14.8, கமுதி-3.2, சராசரி-19.34.