வல்லம்:
தஞ்சை அருகே உள்ள களிமேடு பரிசுத்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் டேவிட்அசோக் (வயது44). இவருடைய அண்ணன் மெர்லின் ராஜேஷ். இவர்களுடைய தாயை அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (28) என்பவர், பல மாதங்களுக்கு முன்பு நடந்த தகராறில் அரிவாளால் வெட்டினார். இதுதொடர்பான வழக்கில் கைதான பிரவீன்குமார் தற்போது விடுதலையாகி உள்ளார்.
இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பிரவீன்குமார் தரப்புக்கும், டேவிட் அசோக், மெர்லின்ராஜேஷ் தரப்புக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு மோதல் ஏற்பட்டது. அப்போது பிரவீன்குமார், டேவிட் அசோக்கை இரும்பு கம்பியால் தாக்கி அவருடைய மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்தார்.
இதேபோல் டேவிட்அசோக் மற்றும் மெர்லின் ராஜேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து பிரவீன்குமாரின் தலையில் அரிவாளால் வெட்டினர். இந்த மோதலில் படுகாயம் அடைந்த பிரவீன்குமார், டேவிட்அசோக் ஆகிய இருவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக இரு தரப்பினரும் தனித்தனியாக அளித்த புகாரின்பேரில் கள்ளப்பெரம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழன் மற்றும் போலீசார் பிரவீன்குமார், டேவிட் அசோக், மெர்லின் ராஜேஷ் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.