துறையூர்:
துறையூர் அருகே உள்ள பச்சைமலை எருமப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நேரு (வயது 38). விவசாயி. இவர், நேற்று முன்தினம் காலை மோட்டார் சைக்கிளில் துறையூர் வந்தார். பின்னர், மோட்டார் சைக்கிளின் பின்புறம் அரிசி மூட்டைகளை வைத்து கட்டிக்கொண்டு சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
செங்காட்டுபட்டியில் இருந்து மூலக்காடு செல்லும் சாலையில் சென்றபோது எதிரே வந்த டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த நேருவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் சம்பவ இடத்திற்கு சென்று நேருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.