கும்பக்கரை அருவி 
செய்திகள்

கும்பக்கரை அருவியில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கும்பக்கரை அருவியில் குளிக்க நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சபரிமலைக்கு செல்லும் பக்தர்களும் கும்பக்கரை அருவியில் நீராடி செல்கின்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து 10 மாதங்களுக்கு பிறகு நாளை முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். காலை 8 மணி முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். அரசின் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு சென்று வரலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.