சென்னை:
தமிழக சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது, பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் பாலியல் குற்றம்சாட்டி பரபரப்பு புகார் மனு ஒன்றை டி.ஜி.பி. திரிபாதியை சந்தித்து கொடுத்ததாக தகவல் வெளியானது. ராஜேஷ் தாஸ் திருச்சியில் இருந்து காரில் வரும்போது, அந்த பெண் அதிகாரியை தனது காரில் ஏற்றி, பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் குற்றம் சுமத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ராஜேஷ் தாஸ் மீது, பெண் ஐ.பி.எஸ். அதிகாரி கொடுத்த புகார் மனு பற்றி விசாரிக்க 6 பேர் குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு நேற்று மாலை உத்தரவிட்டது.
அந்தக் குழுவுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியும், அரசின் திட்ட வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளருமான ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமை தாங்குவார். அக்குழுவில் தலைமையக கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால், நிர்வாகப் பிரிவு ஐ.ஜி. அருண், காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி, டி.ஜி.பி. அலுவலகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ்பாபு, சர்வதேச ஜஸ்டிஸ் மிஷன் அமைப்பின் தலைமை மேலாண்மை அதிகாரி லொரட்டா ஜோனா ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என்றும் அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.