ஆரல்வாய்மொழி:
குமரி மாவட்டம் தோவாளையில் பூ மார்க்கெட்டில் பண்டிகை காலங்களில் பூக்களின் விலை அதிகமாகவும், தேவை அதிகம் இல்லாத நாட்களில் விலை குறைவாகவும் காணப்படும்.
இந்தநிலையில் தற்போது திருமண முகூர்த்த நாட்கள் தொடர்ந்து இருப்பதால் பூக்களின் விலை தினமும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் ரூ.1,800-க்கு விற்பனையான மல்லிகை நேற்று அதிரடியாக ரூ.1,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,800-க்கு விற்பனையானது. அதேபோல ஒரு கிலோ பிச்சி ரூ.1500-க்கு விற்றது. இதேபோல முல்லை, கனகாம்பரம், உள்ளிட்ட மற்ற பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.