மரவள்ளிக்கிழங்கை படத்தில் காணலாம். 
செய்திகள்

திருவட்டார் அருகே கட்டிட காண்டிராக்டர் தோட்டத்தில் வளர்ந்த 6¼ அடி நீள மரவள்ளிக்கிழங்கு

ஆனால் இவரது தோட்டத்தில் 4 கிலோ எடையில் 6¼அடி நீளத்தில் ஒரு பெரிய கிழங்கும், வேறு 4 சராசரி எடைகொண்ட கிழங்குகளும் இருந்தது.

மாலை மலர்

களியல்:

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள முதலாரை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் ராஜசேகர். இவருக்கு முதலார் சந்திப்பில் 44 சென்ட் பரப்பளவில் ரப்பர் தோட்டம் இருக்கிறது. அங்கு ஊடு பயிராக மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளார். தற்போது அது முழுமையாக வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தது.

அந்த மரவள்ளிக்கிழங்குகளை பிடுங்கி எடுத்து சந்தைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டார். அதன்படி அவர் நேற்று தனது தோட்டத்தில் வேலையாட்களுடன் கிழங்கை பிடுங்கும் பணியை மேற்கொண்டார். முதலில் மரவள்ளி கம்பில் உள்ள இலைகளை அகற்றினார்.

பின்னர் ஒரு கம்பை பிடுங்க முயற்சித்தபோது, மண்ணின் மேல் பகுதியில் கிழங்கு ஒன்று நீளமாக இருப்பது தெரிந்தது. இதையடுத்து அந்த கிழங்கு பாதிக்காத வகையில் கம்பு கொண்டு மேல்மண்ணை அகற்றி, கிழங்கை எடுத்து பார்த்தபோது அது மிகவும் பெரியதாக இருந்தது.

அதனை டேப்கொண்டு அளந்து பார்த்தபோது 6¼அடி நீளம் இருந்தது. கீழ்ப்பகுதி 15 அங்குலம் உடையதாக காணப்பட்ட அந்த கிழங்கு, 4 கிலோ எடை கொண்டதாகவும் இருந்தது. வழக்கமாக மர வள்ளி கம்பின் மூட்டுப்பகுதியில் 7 முதல் பத்து கிலோ எடையில் 4 முதல் 5 கிழங்குகள் இருக்கும்.

ஆனால் இவரது தோட்டத்தில் 4 கிலோ எடையில் 6¼அடி நீளத்தில் ஒரு பெரிய கிழங்கும், வேறு 4 சராசரி எடைகொண்ட கிழங்குகளும் இருந்தது. அந்த கிழங்கை கவனமாக எடுத்துக்கொண்டு அருகில் உள்ள வீட்டில் பத்திரமாக ராஜசேகர் வைத்துள்ளார்.

அந்த தகவலை அறிந்த பலரும் அவரது வீட்டுக்கு சென்று பிரமாண்ட கிழங்கை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.