கோப்புபடம் 
செய்திகள்

திருக்கோவிலூர் அருகே பெண் தற்கொலை முயற்சி - கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

திருக்கோவிலூர் அருகே பெண் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் குறித்து கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாலை மலர்

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே காங்கியனூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி சசிகலா (வயது 23). இவர்களுக்கு சூர்யா (4) என்கிற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சசிகலாவிடம் அவரது கணவர் கணேசன், மாமனார் சாமிநாதன், மாமியார் கல்யாணி மற்றும் அத்தியூர் கிராமத்தை சேர்ந்த உறவினர் கண்ணன் மனைவி உஷா ஆகிய 4 பேரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. 

இதில் மனமுடைந்த சசிகலா விஷத்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சசிகலாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் கணேசன் உள்பட 4 பேர் மீது மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.