வீடு புகுந்து கொள்ளை 
செய்திகள்

திங்கள்சந்தை அருகே என்ஜினீயர் வீட்டில் 65½ பவுன் நகை கொள்ளை

திங்கள்சந்தை அருகே என்ஜினீயர் வீட்டில் 65½ பவுன் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திங்கள்சந்தை:

திங்கள்சந்தை அருகே செட்டியார் மடம் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி. இவருடைய மகன் மனோஜ்குமார் (வயது 28), என்ஜினீயர்.

சென்னையில் உள்ள நிறுவனத்தில் மனோஜ்குமார் பணி புரிந்து வருகிறார். இவர் பெருங்களத்தூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கஸ்தூரி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு ஒரு மாதத்துக்கு முன் சென்றார். அவர் நேற்று மகனுடன் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது வீட்டின் இரும்பு கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மனோஜ் குமார் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 65½ பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை.

கஸ்தூரி வீட்டில் இல்லாத நேரத்தில் யாரோ மர்ம நபர்கள் இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இதுபற்றி இரணியல் போலீசில் புகார் செய்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

இந்த கொள்ளை பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.