கோப்புபடம் 
செய்திகள்

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வழக்கு - வாலிபருக்கு 4 ஆண்டு சிறை

தேனி அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

மாலை மலர்

தேனி:

சின்னமனூர் அருகே புலிக்குத்தியை சேர்ந்த பவுன்ராஜ் மகன் செல்வராஜ் என்ற செல்லா (வயது 27). இவர் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ந்தேதி, பல்லவராயன்பட்டி விலக்கு பகுதியில் மதுபோதையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சின்னமனூரில் இருந்து போடி நோக்கி அரசு பஸ் சென்றது. 

அந்த பஸ்சை செல்வராஜ் வழிமறித்து நிறுத்தி தகராறு செய்தார். மேலும் பஸ்சை எடுக்கவிடாமல் வாக்குவாதம் செய்த நிலையில், திடீரென்று அவர் அந்த பஸ் மீது கல்வீசி தாக்கினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. பின்னர் பஸ் கண்டக்டர், டிரைவர் மற்றும் பயணிகள் அவரை மடக்கிப் பிடித்து அதே பஸ்சில் ஏற்றி சின்னமனூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர். 

இந்த வழக்கு தேனி மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் டி.கே.ஆர்.கணேசன் ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி விஜயா நேற்று தீர்ப்பளித்தார். அதில், பஸ் கண்ணாடியை உடைத்த செல்வராஜூவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்றும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.