உயிரிழப்பு 
செய்திகள்

திண்டுக்கல் அருகே குளத்தில் மூழ்கி தேனி சிறுமி உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே குளத்தில் மூழ்கி தேனி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

திண்டுக்கல்:

தேனி லட்சுமிபுரத்தை சேர்ந்த மாரிமுத்து மகள் முத்துவர்சினி(12). 6-ம் வகுப்பு படித்து வந்தார். திண்டுக்கல் அருகில் உள்ள தருமத்துப்பட்டியில் நடந்த உறவினர் வீட்டு விசே‌ஷத்திற்காக சிறுமி தனது குடும்பத்துடன் வந்திருந்தார். இன்று காலை அப்பகுதியில் உள்ள குளத்தில் சிறுவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அதனை முத்துவர்சினி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறிவிழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்க முயன்றனர். தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் அதற்குள் சிறுமி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து கன்னிவாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி முத்துவர்சினிக்கு இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்த நாளிலேயே அவர் உயிரிழந்ததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.