அம்பை:
கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் உள்ள மணல் குவாரியில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளி கடத்துவதாக, மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அந்த மணல் குவாரியில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் திடீர் ஆய்வு நடத்தி, மணல் குவாரி உரிமையாளருக்கு ரூ.9½ கோடி அபராதம் விதித்தார்.
இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தலில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்தனர். இதில் 8 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான நெல்லை பாட்டப்பத்து பகுதியைச் சேர்ந்த செய்யது காதர் மகன் செய்யது சமீர் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை அம்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.