அரசு பேருந்துகள் 
செய்திகள்

பஸ்களை இயக்க தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் தேர்வு- போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பஸ்களை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசு அறிவுறுத்தி இருப்பதை தொடர்ந்து புதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

மாலை மலர்

சென்னை:

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தீவிரம் அடைந்து வருவதால் பஸ்களை முழுமையாக இயக்க முடியவில்லை.

பணிக்கு வரக்கூடிய தொழிலாளர்களை அச்சுறுத்தி பணி செய்ய விடாமல் தடுக்கும் முயற்சி நடந்து வருகிறது. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கையில் போக்குவரத்து கழகங்கள் இறங்கியுள்ளன.

போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களை இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை தேர்வு செய்யும் பணி ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.

சாலைப்பயிற்சி நிறுவனத்தில் படித்து முடித்த டிரைவர்கள் பட்டியல் பெறப்பட்டு அவர்களை பணிக்கு அழைக்கும் பணி நடந்து வருகிறது. இதுதவிர வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் பயிற்சி பெற்ற டிரைவர்கள் பட்டியல் பெறப்பட்டு அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் உள்ள போக்குவரத்து கழகங்களில் தொழில்நுட்ப பணியாளர்கள் தேர்வு செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பஸ்களை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசு அறிவுறுத்தி இருப்பதை தொடர்ந்து புதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இன்று முதல் பல மாவட்டங்களில் தற்காலிக பணியாளர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமும் பதிவு செய்து காத்திருப்போரின் பட்டியலும் பெறப்பட்டுள்ளது.