பாட்னாடு:
ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லல்லுபிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ். இவர் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
33 வயதான இவர் 2015 முதல் 2017 வரை நிதிஷ்குமார் மந்திரிசபையில் சுகாதார மந்திரியாக இருந்தார். இவர் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
பாட்னாவில் அரசு ஒதுக்கியுள்ள வீட்டில் அவர் தங்கி இருந்தார். கடந்த மாதம் அவர் ரஷியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தனியார் ஆஸ்பத்திரியில் போட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்து. காய்ச்சல் மற்றும் உடல் வலியால் அவதிப்பட்டார். டாக்டர்கள் வீட்டிலேயே சிகிச்சை அளித்து வந்தனர்.
நேற்று இரவு திடீரென அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. உடனே டாக்டர்கள் குழுவினர் விரைந்து சென்று சிகிச்சை மேற்கொண்டார்கள். அதன் பிறகு சற்று உடல்நிலை தேறியது. ஆனாலும் அபாய கட்டத்திலேயே இருக்கிறார்.
உடல்நிலை மேலும் மோசமாகிவிட்டால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்காக தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வீட்டில் நிறுத்தப்பட்டுள்ளது.
அவரது சகோதரரும், கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் உடன் இருந்து கவனித்து வருகிறார்.
தேஜ் பிரதாப் யாதவுக்கு ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. அவருக்கு சில தவறான பழக்கங்கள் இருந்தன. போதை மருந்து பழக்கமும் இருப்பதாக அவரது மனைவி ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தார். இது அவரது உடல்நிலையை பாதித்து இருந்தது.
இந்தநிலையில் தான் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அது என்ன காய்ச்சல் என்று டாக்டர்கள் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஒருவேளை கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் இருக்கிறது. அது பற்றியும் டாக்டர்கள் தகவல் எதையும் தெரிவிக்கவில்லை.