அகமதாபாத்:
அரபிக்கடலில் உருவான டவ் தே புயல் கடந்த திங்கட்கிழமை இரவு குஜராத் மாநிலத்தில் உனா அருகே கரையை கடந்தது. சுமார் 28 மணி நேரம் கோர தாண்டவம் ஆடிய பிறகு பலவீனம் அடைந்தது. இந்தப் புயலுக்கு 45 பேர் பலியானதாக மாநில அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இந்நிலையில், புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்து விட்டதாக மாநில நிவாரண ஆணையர் ஹர்ஷத்குமார் படேல் தெரிவித்தார். பெரும்பாலான உயிரிழப்புகள் சுவர் இடிந்து விழுந்ததால் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் மாநில அரசு சார்பில் வழங்கப்படும் என்று முதல் மந்திரி விஜய் ரூபானி அறிவித்துள்ளார். மத்திய அரசு ஏற்கனவே தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.