சமூக இடைவெளியை பின்பற்றாத பழக்கடைக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்த போது எடுத்த படம். 
செய்திகள்

ராணிப்பேட்டையில் சமூக இடைவெளியை பின்பற்றாத டாஸ்மாக் கடை, ஓட்டல்களுக்கு அபராதம்

ராணிப்பேட்டையில் சமூக இடைவெளியை பின்பற்றாத அரசு டாஸ்மாக் கடை, ஓட்டல், நகைக்கடை உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

மாலை மலர்

சிப்காட் (ராணிப்பேட்டை)

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இந்நிலையில் நேற்று ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி தலைமையில், நகராட்சி பொறியாளர் கோபி, கட்டிட ஆய்வாளர் சீனிவாசன், துப்புரவு அலுவலர் ரஹீம், துப்புரவு ஆய்வாளர்கள் முருகன், தேவிபாலா, கணக்காளர் மனோகரன் மற்றும் நகராட்சி பணியாளர்கள், நகராட்சி பகுதிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது ராணிப்பேட்டை ஆர்.ஆர்.சாலையில் சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாத அரசு டாஸ்மாக் கடைக்கு ரூ,5,000 அபராதம் விதித்தனர்.

இதேபோல் ஆர்.ஆர்.ரோடு, வண்டி மேட்டு தெரு, முத்துக்கடை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாத நகைக்கடை, ஓட்டல், பழக்கடை உள்ளிட்ட 10 நிறுவனங்களுக்கு நகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்பட்டது.

கொரோனா பரவுதலை தடுக்க, பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அரசு விதித்துள்ள நிபந்தனைகளை பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும். இவைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை தொடரும் என்று நகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி தெரிவித்தார்.