தரகம்பட்டி:
கரூர் மாவட்டம், தரகம்பட்டி வையம்பட்டி-கரூர் மாநில நெடுஞ்சாலை மற்றும் கடைவீதியில் உள்ள சாலையோரங்களில் சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்திருந்தனர். இதனால் அப்பகுதி வழியாக சென்று வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர். இதையடுத்து சாலையோர உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சார்பில் நெடுஞ்சாலைத்துறைக்கு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சார்பில் தரகம்பட்டி கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனாலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.
இதையடுத்து நேற்று தரகம்பட்டி கடைவீதி மற்றும் சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை, உதவி கோட்ட பொறியாளர் பொன்னுவேல் தலைமையில், இளநிலை பொறியாளர் பூபாலசிங்கம், சாலை ஆய்வாளர்கள், பணியாளர்கள் இணைந்து பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.
இதனால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.