கைது 
செய்திகள்

திருட்டு வழக்கில் பிடிக்க சென்ற போது போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய கொள்ளையன் கைது

சுரண்டை அருகே திருட்டு வழக்கில் பிடிக்க சென்றபோது போலீஸ் காரரை அரிவாளால் வெட்டிய கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.

மாலை மலர்

சுரண்டை:

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பகுதியை சேர்ந்தவர் பால்தினகரன் (வயது 30). இவர் மீது 15-க்கு மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி பகுதியில் உள்ள செல்போன் கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளையில் பால்தினகரனுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்ட தனிப்படை போலீசார், அவரிடம் விசாரிப்பதற்காக நேற்று அதிகாலை அவரது வீட்டுக்கு சென்றனர்.

பின்னர் அவரது வீட்டின் கதவை தட்டி பால் தினகரனை எழுப்பினர். தொடர்ந்து அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதற்கு பால்தினகரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அவரை மடக்கி பிடிக்க போலீசார் முயன்றனர்.

அப்போது பால்தினகரன் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து திடீரென்று போலீஸ்காரர் சக்திவேலின் தலையில் வெட்டினார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து படுகாயம் அடைந்த போலீஸ்காரர் சக்திவேலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஆய்க்குடி சுடுகாட்டு பகுதியில் பதுங்கி இருந்த பால்தினகரனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.