கொரோனா சிகிச்சைக்கான மையம் அகற்றப்பட்ட நிலையில் தகரத்தலான தடுப்பு மட்டும் இருப்பதை படத்தில் காணலாம். 
செய்திகள்

திருப்பரங்குன்றம் அருகே கொரோனா சிகிச்சை மையம் திடீர் அகற்றம்

திருப்பரங்குன்றம் அருகே தோப்பூரில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சைக்கான தற்காலிக மையம் திடீரென அகற்றப்பட்டுள்ளது.

மாலை மலர்

திருப்பரங்குன்றம்:

கொரோனா வைரஸ் பரவலின் 2-வது அலையால் நோயாளிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவியது. நோயாளிகளிள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. மதுரை அரசு மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாத நெருக்கடி ஏற்பட்டது. இதனையொட்டி மதுரையை அடுத்த தோப்பூர் அரசு நூரையீரல் பிரிவு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. அதை கடந்த மே மாதம் 21-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி திறந்து வைத்தார்.

இந்தநிலையில் மு.க.ஸ்டாலின் உத்தரவால் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. அதனால் நோயாளிகள் சிகிச்சை பெற்று சென்றனர். அதனால் கொரோனாவின் 2-வது அலை கட்டுக்குள் வந்தது. இதனையடுத்து கொரோனா சிகிச்சை தற்காலிக மையம் பயன்பாடுன்றி இருந்து வந்தது. இந்தநிலையில் கொரோனா 3-வது அலை தடுப்பு நடவடிக்கையில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 3-வது அலை உருவானால் கொரோனா சிகிச்சை தற்காலிக மையம் பயன்படக்கூடும்.

ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று தற்காலிக மையத்தின் மேல் கூரை முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது. மேலும் படுக்கைகள் மற்றும் உபகரணங்கள் யாவும் உரிய இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே தற்போது கொரோனா சிகிச்சைக்கான தற்காலிக மையத்தை சுற்றி தகடுகளான தடுப்புகளும், புதிய அமைக்கப்பட்ட கழிப்பறைகள் மட்டும் காட்சி பொருளாக காட்சி அளிக்கிறது.