கலெக்டர் அனிஷ்சேகரிடம், நவீன ஸ்ட்ரெக்சர் குறித்து கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் விளக்கமளித்தனர் 
செய்திகள்

ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய ஸ்ட்ரெக்சர்- மதுரை மாணவர்கள் கண்டுபிடிப்பு

நவீன வசதி கொண்ட 5 ஸ்ட்ரெக்சர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு பாண்டியன் சரஸ்வதி யாதவ் என்ஜினீயரிங் கல்லூரி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலையின் தாக்கத்தால் நாள்தோறும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். கொரோனோ பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய ஸ்ட்ரெக்சரை மதுரை சிவகங்கை சாலையில் அரசனூரில் உள்ள பாண்டியன் சரஸ்வதி யாதவ் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் உருவாக்கி அசத்தியுள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி சுவாச சிக்கலுடன் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அனைவருக்கும் உடனே படுக்கைகள் கிடைப்பதில்லை.

படுக்கைகள் கிடைக்கும் வரை அவர்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதற்கு ஏதுவாக சில தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய பஸ்களை மதுரை அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளனர்.

இந்த பஸ்களில் தற்காலிகமாக சிகிச்சை பெறும் நோயாளிகளை விரைவில் படுக்கைகளுக்கு இடம் மாற்றியாக வேண்டும்.

இந்த நடைமுறையை விட கூடுதல் வசதியை சாத்தியப்படுத்தும் வகையில் ஆக்சிஜன் சிலிண்டர் உடன் கூடிய நவீன ஸ்ட்ரெக்சர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த ஸ்ட்ரக்சரை கல்லூரியின் உதவி பேராசிரியர் பொன் வேல்முருகன் வழிகாட்டுதலுடன் மோகன், வெற்றி மணிகண்டன், தன பிரகாஷ், போஸ் ஆகிய 4 மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ஆக்சிஜன் படுக்கை பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில் இந்த முயற்சியை மேற்கொண்டோம். இந்த வகை ஸ்ட்ரெக்சர்களில் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும். பெரிய வகை ஆக்சிஜன் சிலிண்டர்கள் படுக்கைக்கு கீழே வைத்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்க எவ்வளவு நேரமானாலும் ஆக்சிஜன் தடையின்றி கொடுக்க முடியும். ரூ. 55 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கொண்டு 3 நாட்களில் இதை வடிவமைத்து உள்ளோம் என்றனர்.

கலெக்டர் அனீஷ்சேகர் முன்னிலையில் கல்லூரி நிர்வாக இயக்குனர் வரதராஜன், முதல்வர் டாக்டர் ராஜா ஆகியோர் வழங்கினார்.

மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பி.பி.இ. கிட், முகக்கவசம், கையுறை ஆகியவையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உதவிப் பேராசிரியர்கள் முருகன், மணிகண்டன், கருப்பணன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT