சென்னை:
போக்குவரத்து கழக ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். போக்குவரத்து கழகங்களில் செயல்படும், தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., டி.டி.எஸ்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஏ.எல்.எல்.எப்., டி.டபிள்யூ.யு. ஆகிய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக கூறி உள்ளனர்.
இந்த நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் வியாழக்கிழமை நடைபெறும் வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கழம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே விடுப்பு விண்ணப்பித்தவர்களும் நாளை கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்றும் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், திட்டமிட்டபடி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 95% தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் வேலை நிறுத்தத்திற்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.