தஞ்சாவூர்:
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராமச்சந்திரன், இணை செயலாளர் ராமலிங்கம், மாவட்ட தலைவர் அறிவழகன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும். பணி வரன்முறை செய்யப்படாத 5 ஆயிரம் பணியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும். பொது வினியோகத்திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும். அனைத்து நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் அல்லது ஓய்வு பெறும் இறுதி மாத ஊதியத்தில் சரிபாதி இதில் எது அதிகமோ? அந்த தொகையை ஓய்வூதியமாக வழங்க வேண்டும்.
நியாய விலைக்கடைகளில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் 500 குடும்ப அட்டைக்கு மேல் உள்ள நியாய விலைக்கடைகளுக்கு எடையாளர் நியமனம் செய்ய வேண்டும். அரசு பணியாளர்களுக்கு வழங்குவது போல் மருத்துவபடியை ரூ.300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
இதன் ஒரு பகுதியாக வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. அதன்படி தஞ்சை மாவட்ட தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் அனைத்து பணியாளர்களும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.