சிறப்பு ரெயில் 
செய்திகள்

தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இன்று முதல் வழக்கம்போல் இயக்கப்படும்

தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இன்று முதல் வழக்கம்போல் இயக்கப்படும் தெற்கு ரெயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னை:

நிவர் புயல் காரணமாக தெற்கு ரெயில்வே பல்வேறு வழித்தடங்களில் 50-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்களை ரத்து செய்தது.

இந்த நிலையில் புயல் கரையை கடந்ததையடுத்து பஸ், மெட்ரோ ரெயில், சேவை நேற்று பிற்பகல் முதல் தொடங்கியது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கான மின்சார ரெயில்களும் ஓடத்தொடங்கின.

இன்று காலை முதல் சிறப்பு மின்சார ரெயில்கள் அட்டவணைப்படி இயக்கப்படுகிறது.

2 நாட்கள் அரசு பொது விடுமுறைக்கு பிறகு இன்று அலுவலகங்கள், திறக்கப்பட்டன. இதனால் 4 வழித்தடங்களிலும் சிறப்பு மின்சார ரெயில்கள் அதிகாலை முதல் ஓடத்தொடங்கின.

இதேபோல சென்னையில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்களும் இன்று முதல் வழக்கம்போல் ஓடத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:-

நிவர் புயல் பாதிப்பில் ரெயில் பாதைகள், ரெயில் நிலையங்களில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. சில இடங்களில் ஏற்பட்டுள்ள சிறு சேதாரங்களையும் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் தெற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயில்களை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இணை ரெயில்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டால் மட்டுமே ஒரு சில ரெயில்களை உடனடியாக இயக்குவதில் தாமதம் ஏற்படலாம் என்றனர்.