கோப்புப்படம் 
செய்திகள்

குமரியில் தனிப்பிரிவு போலீசார் அதிரடி மாற்றம்- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

குமரி மாவட்டத்தில் 34 தனிப்பிரிவு போலீசார் உள்ளனர். இவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறார்கள்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல் சப்-டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளில் 38 போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

அந்தந்த போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் சம்பவங்களை உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஒவ்வொரு போலீஸ் நிலைய பகுதியிலும் ஒரு தனிப்பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குமரி மாவட்டத்தில் 34 தனிப்பிரிவு போலீசார் உள்ளனர். இவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறார்கள். சமீப காலமாக பல்வேறு தனிப்பிரிவு போலீசார் மீது புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இது தொடர்பாக ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று வாராந்திர ஆய்வுக்கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதில் தனிப்பிரிவு போலீசார் கலந்து கொண்டனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலந்து கொண்டு பேசினார். கூட்டம் முடிந்த சிறிது நேரத்தில் 33 தனிப்பிரிவு போலீசாரை அதிரடியாக மாற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவு பிறப்பித்தார்.

நாகர்கோவில் நேசமணி நகர் போலீஸ் நிலைய பகுதியில் கலெக்டர் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளது. எனவே நேசமணிநகர் போலீஸ் நிலையத்திற்கு 2 தனிப்பிரிவு ஏட்டுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கலெக்டர் அலுவலகங்களில் நடக்கும் தகவல்களை சேகரிக்க ஒருவரும், மற்ற பகுதிகளை கண்காணிக்க இன்னொருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் கலெக்டர் அலுவலக தனிப்பிரிவு போலீசாக அசோக்கும், மற்ற இடங்களுக்கு பிலிப்பும் நியமிக்கப்பட்டுள்ளனர். வடசேரி போலீஸ் நிலைய தனிப்பிரிவு போலீஸ் ஏட்டாக செல்லீஸ், கோட்டாருக்கு மாதவன்பிள்ளை, ஆசாரி பள்ளத்திற்கு சுனில், ஆரல்வாய்மொழிக்கு முத்துசங்கர், பூதப்பாண்டிக்கு பாபு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தனிப்பிரிவு போலீசாரும் மாற்றப்பட்டுள்ளனர். சிலர் போலீஸ் நிலைய பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். புதியதாக தனிப்பிரிவு போலீசாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 33 தனிப்பிரிவு போலீசார் கூண்டோடு மாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.