சென்னை:
காஷ்மீரின் லடாக் பகுதியில் நடந்த விபத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி (34) உயிரிழந்தார். கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரைச் சேர்ந்த இவர் கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இறந்த கருப்பசாமிக்கு தமயந்தி என்ற மனைவியும், கன்யா(7), வைஷ்ணவி(5) ஆகிய மகள்களும், பிரதீப்ராஜ் (1) என்ற மகனும் உள்ளனர்.
லடாக் விபத்தில் இறந்த தமிழக வீரர் கருப்பசாமியின் குடும்பத்திற்கு முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
‘லடாக் பகுதியில் நிகழ்ந்த எதிர்பாரா வாகன விபத்தில் ராணுவ வீரர் நாயக் கருப்பசாமி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டு, குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என முதல்வர் கூறி உள்ளார்.