கோப்புப்படம் 
செய்திகள்

பள்ளி மாணவிக்கு இன்று நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

திருமண வயதை எட்டும் முன்பே மாணவிக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றம் என இரு வீட்டாருக்கும் அதிகாரிகள் அறிவுரை கூறினர்.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கெங்கவல்லி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 24). இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். மாணவியின் பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் அவர் தனது பாட்டியின் பராமரிப்பில் உள்ளார்.

இந்த நிலையில் மாணவிக்கும், விக்னேசுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதுபற்றி சேலம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மற்றும் வருவாய் துறையினருக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது மாணவிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். திருமண வயதை எட்டும் முன்பே மாணவிக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றம் என இரு வீட்டாருக்கும் அதிகாரிகள் அறிவுரை கூறினர்.