திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பாக்கு பேட்டை கிராமத்தில் நாகபூசணம் (வயது 78) என்பவர் கடந்த வாரம் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து போனார்.
அதனைத்தொடர்ந்து ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூர் தாலுகாவில் வசித்து வந்த நாகபூசணத்தின் மகள் ராணி மற்றும் அவரது கணவர் ஸ்ரீதர், பேரன்கள் 6-ம் வகுப்பு மாணவனான ருக்கேஷ் (11), அவரது சகோதரர் ஜஸ்வந்த் (13), ஆகியோர் வேலூர் கிராமத்திலிருந்து வந்து தங்கினார்கள்.
இந்த நிலையில் நேற்று மதியம் ராணியின் மகன்கள் ருக்கேஷ், ஜஸ்வந்த் ஆகியோர் அப்பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் போளிவாக்கம் ஏரியில் குளிக்க சென்றுள்ளனர்
அப்போது ருக்கேஷ் ஏரியில் குளித்துக்கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக சேற்றில் மாட்டிக்கொண்டு ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார். இதைக்கண்ட அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் இறந்து போன சிறுவன் ருக்கேஷ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மணவாள நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.