காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த கே.என். புதூர் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் ஈஸ்வரன் (வயது 17).
இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் ஆயுத பூஜை விடுமுறையையொட்டி சொந்த ஊரான கே.என். புதூருக்கு ஈஸ்வரன் வந்து இருந்தார். நேற்று அவர், சக நண்பர்களுடன் ஏரியில் நீச்சல் பயிற்சி பெற சென்றார். அங்கு ஏரியில் இறங்கி அனைவரும் குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் ஒரு திசையிலிருந்து மறு திசைக்கு நீந்தி செல்லும்போது, ஏரி நடுப்பகுதியில் ஈஸ்வரனால் நீந்த முடியவில்லை. இதனால் நடு ஏரியில் தத்தளித்த அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதனிடையே தங்களுடன் நீச்சல் அடித்து வந்து கொண்டிருந்த ஈஸ்வரனை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்த, அவரது நண்பர்கள் நீண்ட நேரம் ஏரியில் அவரை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த சம்பவம் பற்றி அறிந்த காடையாம்பட்டி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து ஏரியில் இறங்கி ஈஸ்வரன் உடலை மீட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.