காய்கறிகள் 
செய்திகள்

நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.6 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று 17 டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.6 லட்சத்துக்கு விற்பனையானது.

மாலை மலர்

நாமக்கல்:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாமக்கல் உழவர் சந்தை கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டு, இங்கு செயல்பட்டு வந்த கடைகள் நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியதை தொடர்ந்து கடந்த 26-ந் தேதி முதல் பழைய இடத்திலேயே உழவர் சந்தை இயங்கி வருகிறது.

இங்கு நேற்று 13¼ டன் காய்கறிகள் மற்றும் 3¾ டன் பழங்கள் விற்பனைக்கு வந்து இருந்தன. இவை ரூ.5 லட்சத்து 96 ஆயிரத்து 270-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 1,750 பேர் வாங்கி சென்றனர்.

இந்த கடைகளில் தக்காளி கிலோ ரூ.20-க்கும், கத்தரி கிலோ ரூ.60-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.20-க்கும், புடலங்காய் கிலோ ரூ.24-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.36-க்கும், கேரட் கிலோ ரூ.84-க்கும், பீட்ரூட் கிலோ ரூ.48-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.32-க்கும், உருளை கிழங்கு கிலோ ரூ.50-க்கும், இஞ்சி கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டன. நாமக்கல் உழவர் சந்தைக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்து இருப்பதாகவும், அவற்றின் விலை சற்று குறைந்து இருப்பதாகவும் உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.