சென்னை:
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவந்த பாலு மற்றும் காவலர் பொன் சுப்பையா ஆகியோர் ஏரல் கடைவீதியில் தகராறில் ஈடுபட்ட கொற்கை கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் என்பவரை எச்சரித்து அனுப்பிவைத்து விட்டு, இருவரும் ரோந்துபணியில் ஈடுபட்டுள்ளனர்.
இருவரும் இன்று அதிகாலை இரு சக்கரவாகனத்தில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஆத்திரமடைந்த முருகவேல் சரக்குவேனை ஓட்டிச்சென்று, இரு சக்கரவாகனத்தின் பின் பகுதியில் மோதியதில், உதவி ஆய்வாளர் பாலு கீழே விழுந்து பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்தவேதனை அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த உதவிஆய்வாளர் பாலு குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பணியில் ஈடுபட்டு இருக்கும் போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்திற்கு சிறப்பினமாக, ரூ.50லட்சமும், காயமடைந்த காவலர் பொன்சுப்பையாவுக்கு ரூ.2 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உரியதண்டனை பெற்றுக் கொடுக்க காவல் துறையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.