பிடிபட்ட ஹவாலா பணத்தையும், போலீசாரிடம் சிக்கியவரையும் காணலாம் 
செய்திகள்

ஓடும் பஸ்சில் கட்டு கட்டாக ரூ.20 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது

ஓடும் அரசு பஸ்சில் கட்டு, கட்டாக ரூ.20 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது. குமரியில் இருந்து கேரளாவுக்கு கொண்டு சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

களியக்காவிளை:

தமிழக-கேரள எல்லையான அமரவிளை சோதனைச்சாவடியில் கேரள மதுவிலக்கு போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் எல்லையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் கேரள அரசு பஸ்சை போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது பஸ்சில் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக உட்கார்ந்திருந்தார். பின்னர் அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்ததில், அதில் கட்டு, கட்டாக ரூ.20 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபற்றி, அந்த பணத்தை வைத்திருந்த திருச்சூர் மாவட்டம் சாலக்குடி பகுதியை சேர்ந்த ராஜீவ் (வயது 49) என்பவரிடம் விசாரணை நடத்தியதில், பணம் கொண்டு சென்றதற்கான எந்தவொரு ஆவணமும் அவரிடம் இல்லை. மேலும் ஹவாலா பணம் என்பதும் தெரியவந்தது. குமரியில் இருந்து கேரளாவுக்கு ஹவாலா பணத்தை கொண்டு சென்ற போது ராஜீவ் போலீசிடம் சிக்கியுள்ளார். இதனால் ராஜீவ்விடம் ஹவாலா பணம் கொடுத்த நபர் யார்? அந்த பணத்தை ராஜீவ் யாரிடம் கொடுக்க சென்றார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜீவ்வை கைது செய்தனர். பஸ்சில் சிக்கிய பணமும் கைப்பற்றப்பட்டது.