கைது 
செய்திகள்

கொடைரோடு அருகே ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்- பெண் கைது

கொடைரோடு அருகே வீட்டில் பதுக்கப்பட்ட ரூ.1.60 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெண் கைது செய்யப்பட்டார்.

மாலை மலர்

கொடைரோடு:

தமிழகத்தில் கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகள் முழுமையாக அடைக்கப்படும் என அரசு அறிவித்தது. இதனைதொடர்ந்து மதுவிற்பனை நடைபெறவில்லை. மேலும் கள்ளசந்தையில் மதுவிற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்திருந்தனர்.

மாவட்டம் முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் மதுவிற்பனை அதிகரித்தது. சிலர் தங்கள் தேவைக்கும் சிலர் பதுக்கி விற்பதற்கும் மதுவாங்கி சென்றனர். பள்ளபட்டி பகுதியில் கள்ளச்சந்தையில் மதுவிற்கப்படுவதாக புகார் எழுந்தது.

இதனைதொடர்ந்து அம்மையநாயக்கனூர் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் பாலமுத்தையா மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பள்ளபட்டி சிப்காட் பகுதி தேவர் நகரில் மணிகண்டன் மனைவி ஆனந்தஜோதி(40) என்பவர் வீட்டில் மதுபதுக்கி கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து போலீசார் ஆனந்த ஜோதியை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 1355 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.