கோவில் நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள் 
செய்திகள்

பட்டினப்பாக்கத்தில் ரூ.12 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு

பட்டினப்பாக்கத்தில் ரூ.11.79 கோடி மதிப்புடைய கோவில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை மீட்டனர்.

சென்னை:

சென்னை பட்டினப்பாக்கம் சாந்தோம் நெடுஞ்சாலையில் நடுக்குப்பம் பயண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான 8,800 சதுரஅடி நிலம் உள்ளது. இந்த நிலத்தின் வாடகைதாரர் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு, நிலத்தை வாகன நிறுத்தமாக பயன்படுத்திக்கொள்ள உள்வாடகைக்கு விட்டிருந்தார். இந்தநிலையில் வாடகைப்பணம் முறையாக வந்து சேராததால் நிலத்தை காலி செய்யக்கோரி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் விடுக்கப்பட்டது.

இதையடுத்து தொடரப்பட்ட வழக்கு காரணமாக அந்த நிலத்தை காலி செய்யும் நடவடிக்கையில் கடந்த 8 ஆண்டுகளாக சிக்கல் நீடித்தது. இந்தநிலையில் நிலத்தை சுவாதீனம் செய்துகொள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் கவினேதா, செயல் அதிகாரி பி.லட்சுமிகாந்த பாரதிதாசன், வருவாய்த்துறை ஆய்வாளர் ஜெ.கிரிஜா உள்ளிட்ட அதிகாரிகள் குழு சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று, ரூ.11.79 கோடி மதிப்புடைய கோவில் நிலத்தை மீட்டனர். அப்போது அந்த நிலத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு வீட்டுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

SCROLL FOR NEXT