விபத்து 
செய்திகள்

குளித்தலை அருகே சாலை விபத்தில் வியாபாரி பலி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் வியாபாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

குளித்தலை:

கரூர் மாவட்டம் குளித்தலை காவேரி நகரை சேர்ந்தவர் மாதவன். இவர் மதுரை மேலூரில் டயர் வாங்கி விற்கும் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மாதவன் நேற்று இரவு மதுரை மேலூரில் இருந்து காரில் தனது சொந்த ஊரான குளித்தலைக்கு சென்றார்.

மணப்பாறை-குளித்தலை நெடுஞ்சாலையில் குளித்தலை அருகே தேசியமங்கலம் வளைவில் இன்று காலை கார் சென்ற போது எதிர்பாராத விதமாக சாலையில் உள்ள சென்டர் மீடியா மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் மாதவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாதவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் உயிரிழந்த மாதவனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.