தற்கொலை 
செய்திகள்

தஞ்சையில் அரிசி கடை உரிமையாளர் தற்கொலை

தஞ்சையில் அரிசி கடை உரிமையாளர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் மோத்திரப்பசாவடியை சேர்ந்தவர் சுவாமிநாதன்(வயது58). இவர் வாடிவாசல் கடைத்தெருவில் அரிசி கடை வைத்திருந்தார். நேற்றுகாலையில் சீக்கிரமாகவே வீட்டில் இருந்து கடைக்கு புறப்பட்டு வந்தார். பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் அவரை தேடி கடைக்கு வந்தனர்.

அப்போது கடை பாதி திறந்தநிலையில் இருந்தது. உடனே கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கு சுவாமிநாதன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் சுவாமிநாதன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் சுவாமிநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சினை காரணமாக சுவாமிநாதன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.