தகடூர்:
தருமபுரி குமாரசாமிப்பேட்டை தட்சிணாமூர்த்தி மடத்தெருவை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் மகன் கணேசன் (வயது35). இவரது மனைவி ரேகா, இவர்களுக்கு திவ்யதர்சினி (8) என்ற ஒரு மகள் உள்ளார். கணேசன் மாரண்ட அள்ளியில் வருவாய் ஆய்வாளராக பணி புரிந்து வந்தார்.
இந்த நிலையில் வருவாய் ஆய்வாளர் கணேசனுக்கும், வேறொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணேசனுக்கும், அவரது மனைவி ரேகாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனிடையே ரேகா தனது மகளுடன் திருப்பத்தூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார்.
சம்பவத்தன்று கணேசன் மிகுந்த மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கணேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவல் அறிந்ததும் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்- இன்ஸ்பெக்டர் பால சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வருவாய் ஆய்வாளர் கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட கணேசன் குடும்பத்தகராறு காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.