கோப்பு படம். 
செய்திகள்

மழையால் சேதமடைந்த நிலக்கடலை, உளுந்து, நெற்பயிர்களுக்கு நிவாரணம்- விவசாயிகள் கோரிக்கை

மழையால் சேதமடைந்த நிலக்கடலை, உளுந்து, நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாலை மலர்

நாஞ்சிக்கோட்டை:

தஞ்சை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் முளைத்தன. தற்போது சேதம் அடைந்த நெற்பயிர்களை கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நாஞ்சிக்கோட்டை அருகே உள்ள வேங்கராயன் குடிகாடு, கொல்லாங்கரை, மருங்குளம், மின்னாத்தூர், குருங்குளம், ராவுசாப்பட்டி, திருக்கானூர்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் கோடை சாகுபடி மார்கழி பட்டத்தில் தங்களது வயல்களில் நிலக்கடலை, உளுந்து, எள் மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றை விதைத்து சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

தொடர் மழையினால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நிலக்கடலை, உளுந்து, எள் செடிகள் அழுகி நாசமடைந்தன. தற்போது வயல்களில் இருந்து மழைநீர் வடிந்து விட்டதால் நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. மீண்டும் வயல்களை உழுது சாகுபடி செய்வதற்கு போதிய பண வசதி இல்லை. கோடை சாகுபடியை மீண்டும் தொடங்கி வாழ்வாதாரத்தை பெறுவதற்கு நிலக்கடலை, உளுந்து, எள் மற்றும் இடுபொருட்களை அரசு இலவசமாக வழங்க வேண்டும். மழையால் சேதமடைந்த நிலக்கடலை, உளுந்து மற்றும் நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.