கோப்புபடம் 
செய்திகள்

என்ஜினீயரிங் மாணவர்களுக்கு மறு தேர்வு - அண்ணா பல்கலைக்கழகம் முடிவு

மாணவர்களின் மோசமான தேர்வு முடிவுகள் பற்றிய புகார்களை தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மறு தேர்வுகளை நடத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.

சென்னை:

கொரோனா நோய் தொற்று 2-வது அலை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் பொறியியல் மாணவர்களுக்கு இணைய வழியில் பிப்ரவரி மாதம் 3,5 மற்றும் 7-வது பருவத்தேர்வுகள் நடைபெற்றன.

இணையவழி தேர்வு எழுதிய 4.25 லட்சம் மாணவர்களின் முடிவுகளை மட்டுமே அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. முறைகேடுகளில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட மாணவர்களின் முடிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் தேர்வு முடிவுகள் வெளிவந்து 2.3 லட்சம் மாணவர்களில் 1.1 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் மோசமான தேர்வு முடிவுகள் பற்றிய புகார்களை தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் ஆன்லைன் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மறு தேர்வுகளை நடத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்தநிலையில் வரும் ஜூன் மாதம் இணைய வழியில் மறுதேர்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய முறையில் நடத்தப்படும் இந்த மறு தேர்வு குறித்து விளக்க இணைப்பு கல்லூரிகளின் முதல்வர்களோடு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் விளக்க கூட்டம் நடத்தப்பட்டது.

அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இணைப்பு கல்லூரியின் முதல்வர்கள் சிலர் கூறியதாவது:-

கடந்த பிப்ரவரி மாதம் 3,5 மற்றும் 7-வது பருவ பொறியியல் படிப்புகளுக்கான இணைய வழி தேர்வு எழுதிய மாணவர்க, இணைய வழியில் நடத்தப்படும் இந்த மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விருப்பமுள்ள மாணவர்கள் தேர்வு எழுதலாம்.

மேலும் பழைய வினாத்தாள் முறையே பின்பற்றப்படும். 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும் தேர்வு 3 மணிநேரம் நடைபெறும்.தேர்வுக்கு 30 நிமிடங்களுக்கு முன் அந்த கல்லூரிகளுக்கு வினாத்தாள்கள் அனுப்பப்படும்.

தேர்வுக்கு பிறகு மாணவர்கள் ஸ்கேன் செய்த விடைத்தாள்களை தங்களுடைய கல்லூரியின் வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

SCROLL FOR NEXT